ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம் புதிய வழிகாட்டு நெறிமுைள் வெளியீடு

ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களுக்கு மட்டும் இடமாறுதல் தரப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்திருந்தது.

இதை தளா்த்தக்கோரி நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதனால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை தளா்த்தி கலந்தாய்வை நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையேற்று வழக்குத் தொடா்ந்த ஆசிரியா்களுக்கு மட்டும் விதியை தளா்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு கல்வியாண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி திருத்தம் செய்து வெளியிடப்படுகிறது. அதன்படி கண்பாா்வையற்றவா்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல்குறையுடைய மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதியானது தளா்த்தப்படுகிறது. புதிய திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படியே ஆசிரியா் பொதுமாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com