பிரதமர் மோடி தன்னைப் பாராட்டியதும் தனது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது என்று கோவளம் ஹோட்டல் ஊழியர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் இரண்டாம் அலுவல் சாரா சந்திப்பு அக்.11 & 12 தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முதல் நாள் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இரண்டாம் நாள் கோளத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் இருந்து பிரதமர் மோடி தங்கியிருந்த கோவளத்தின் தாஜ் ஹோட்டலுக்கு சீன அதிபர் வந்தார். பிரதமர் மோடி வாசலில் நின்று அவரை இன்முகத்துடன் வரவேற்றார். இதன்பின்னர், ஹோட்டலில் இருந்து ஹோட்டலை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிக்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேட்டரி காரில் சென்றனர். அப்போது, ஹோட்டல் ஊழியர் தேவேந்திரன் பேட்டரி காரை இயக்கியுள்ளார். முன் இருக்கையில் டிரைவர் அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார். அவர் தேவேந்திரனிடம் பேசிக்கொண்டே பயணித்துள்ளார். இதுகுறித்து தேவேந்திரன் மிகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரைவர் தேவேந்திரன், ' நான் ஹோட்டல் ஊழியர். அவர் சென்ற பேட்டரி காரை இயக்கினேன். அவ்வளவு தான் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால், பிரதமர் மோடி என்னிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. பிரதமர் மோடி என்னிடம் பெயர் என்ன? என்று கேட்டார். 'தேவேந்திரன்' என்று கூறினேன். அதன்பின்னர் எவ்வளவு மணி நேரம் வேலை? என்று கேட்டார். 'எட்டு மணி நேரம்' என்று கூறினேன்.
குழந்தைகள் உள்ளதா? என்று கேட்டார். 'ஒரு பெண் குழந்தை உள்ளது. செயின்ட் ஜோசப் கல்லுாரியில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' இன்ஜினியரிங் படிக்கிறாள்' என்று கூறினேன். அதைக்கேட்டு அவர், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்று ஆங்கிலத்தில் கூறினார். அவர் கூறியதும் எனக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது' என்று கூறினார்.