மன அழுத்தம் காரணமாக உயிரிழக்கும் மருத்துவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பணிச் சூழலில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் சங்கத்தினர் குற்றம்சாட்டு முன்வைத்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 16 பேர் மன அழுத்தம் காரணமாக இறந்ததாகவும், குறைந்த ஊதியத்தை வழங்கிவிட்டு ஓய்வில்லாமல் பணியாற்றுமாறு நிர்பந்திப்பதே அதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், சர்வதேச தரத்தில் மருத்துவ சேவைகள் இங்கு இருப்பதாகவும் அரசு தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிலையை எட்டுவதற்காக அனுதினமும் பாடுபடும் அரசு மருத்துவர்களின் ஊதியம் மட்டும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.
அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை பணி நேரமோ, தொடர் விடுமுறைகளோ கிடையாது. நோயாளிகளின் வருகையைப் பொருத்து இரவு பகல் பாராமல் ஓய்வின்றி உழைக்க வேண்டியுள்ளது. இத்தகைய பணிச் சூழல் நெருக்கடியால் பல மருத்துவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 16 அரசு மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். தற்போது அடுத்தகட்டமாக வரும் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.