சென்னை: இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் அக்டோபர் 20ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
அதே சமயம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் தற்போது வரை 8 சதவீதம் கிடைத்துள்ளது.
லட்சத் தீவு, மாலத் தீவு, கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.