போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படவுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1.36 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வியாழக்கிழமை 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.16,800 வரை வழங்கப்படும். தீபாவளி முன்பணம் புதன்கிழமை முதல் 8 போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கென 21,586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் குறைந்த தொலைவுக்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை ஏற்கெனவே சென்னையில் முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். கரூரில் இருந்து புதன்கிழமை குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலும் விரைவில் 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது வழக்கம்போல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.