நான்குனேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் காலியாக இருந்த நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காலியாக இருந்த காமராஜ் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நான்குனேரியில், 66.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காமராஜ் நகரில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒரு சுற்றுக்கு 14 மேசைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
அதைத் தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகளிலும் தலா 5 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் எண்ணப்படும்.
எந்தெந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரங்களை இதற்காக தேர்வு செய்ய வேண்டும் என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், அந்த மையத்தில் உள்ள அதிகாரிகளால் உறுதி செய்யப்படவுள்ளது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை வாக்குகள் எண்ணிக்கைக்காக 11 மேசைகள் போடப்பட்டுள்ளன.
இதில், விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளில் வாக்குகளை எண்ணும் பணி சற்று தாமதமாக தொடங்கப்பட்டது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.