எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழா: அமைச்சர் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், இஸ்லாமிய தமிழறிஞர் உமறுப்புலவரின் பிறந்த நாள் விழா அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர்ப் போர்வை வைத்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, உமறுப்புலவர் சங்க நிர்வாகி உ. காஜா மைதீன் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில், வருவாய்த் துறை மற்றும் சமூகநலத் துறை சார்பில் 198 பேருக்கு ரூ. 80 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கிப் பேசினார்.
விழாவில், முன்னாள் எம்எல்ஏ மோகன், வருவாய்க் கோட்டாட்சியர் ஜே. விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.