நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 4 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் சென்னை மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் முகமது இர்பான், அவரது தந்தை முகமது சபி, தருமபுரியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகிய 8 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.