வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் பயிற்சி பெற்ற 6 ஆயிரத்து 606 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:
வடகிழக்குப் பருவமழையால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டன. பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 9,162 பெண்கள் அடங்கிய 21, 597 முதல் நிலை மீட்பாளர்களும், கால்நடைகளைப் பாதுகாக்க 8,871 பேரும், மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 9,909 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.
மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, 3,662 ஆற்றுப் படுகைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 8,749 பாலங்களிலும், 1.40 லட்சம் சிறுபாலங்களிலும் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் தங்குமிடங்கள்: மாநிலத்தில் உள்ள தாழ்வான, பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் ஈடுபடும் குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைத் தவிர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்கள் என மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர்.
தனியார் ஆய்வர்களுக்கு முக்கியத்துவம் தராதீர்: தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் பல்வேறு தனி நபர்கள் வானிலை குறித்த தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் முன்னறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். அரசு தரப்பில் வானிலை ஆய்வு மையம் தரும் தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது. எனவே, தனியார் வானிலை ஆய்வர்களின் தகவல்களை வைத்து மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றார்.
இந்தச் சந்திப்பின் போது, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.