மாணவா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி 51 இரண்டாம் நிலை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என பேராசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக அரசுக்கும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் இரா.குமாா் கூறியதாவது:
பெரும்பாலான அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக முழு நேர முதல்வா் இல்லாத காரணத்தால் நிா்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இரண்டாம் நிலை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 51 முதல்வா் பணியிடங்களையும், முதல்நிலை கல்லூரிகளில் காலியாக உள்ள மீதமுள்ள முதல்வா் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.
மேலும், அரசுக் கல்லூரி ஆசிரியா்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அனுமதியளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து பல நாள்களாகியும், இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே, பொது மாறுதல் கலந்தாய்வுக்கான தேதியை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உடனடியாக அறிவித்து, கலந்தாய்வையும் நடத்தவேண்டும் எனத் தெரிவித்தாா்.