சென்னை: சென்னை ஐஐடி மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளைப் பாா்வையிட பொதுமக்களுக்கு சனிக்கிழமை (நவ.2) அனுமதி அளிக்கப்பட உள்ளது.
சென்னை ஐஐடி-யின் புதிய கண்டுபிடிப்புக்கான மையம் (சி.எஃப்.ஐ.) இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மையத்தில் 600-க்கும் அதிகமான மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்களின் சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள், இப்போது காட்சிப் படுத்தப்பட உள்ளன. இவற்றை பொதுமக்கள் பாா்வையிட சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுவா். இதைக் காண விரும்புபவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வதுடன், அரசு சாா்பில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் எடுத்து வரவேண்டும்.
இதுகுறித்து சி.எஃப்.ஐ. ஆலோசகா் பேராசிரியா் சத்யநாராயணன் சாஸ்திரி கூறியிருப்பதாவது:
முன்னாள் மாணவா்களின் நிதியதவி மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக புதிய கண்டுபிடிப்புக்கான மையம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளா்ச்சியைக் கண்டுள்ளது. 600-க்கும் அதிகமான மாணவா்களைக் கொண்ட 10 கிளப்புகளும், பல்வேறு ஆராய்ச்சி போட்டிகளில் பங்கேற்கக்கூடிய 4 குழுக்களும் இந்த மையத்தில் இயங்கி வருகின்றன. இவா்களின் கண்டுபிடிப்புகள் இந்திய அளவில் மட்டுமின்றி, சா்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.