விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியை கூடுதல் ஆணையர்கள் ஏ.அருண், ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, 6 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.
உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
சிலைகள் கரைக்கப்படும் 3 நாள்களும், பாதுகாப்புப் பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸார் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணிக்காக, போலீஸார் முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.