மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப்.2) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தென் கடலோர ஆந்திரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட மேலடுக்குச் சுழற்சி தற்போது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இதுதவிர, தென்மேற்கு பருவக் காற்றின் சாதகமான போக்கு நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (செப். 2) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 30 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, புதுக்கோட்டை கீரனூர், இலுப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.