சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை கீழடியில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை பரிசோதித்ததில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுவரை, இப்பகுதியிலுள்ள 5 பேர்களது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டதில், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பண்டைய காலத்தில் வீடுகளில் தரைத்தளங்கள் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.