சென்னை: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக வெள்ளி மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65,000லிருந்து 72,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்பட்டது.
இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 43வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 76,000 கன அடியாகவும், அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்திற்கு நாளை நீர் திறக்கப்பட உள்ளது.