மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவியை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிகளுக்குப் பார்வையற்றவர்கள் 4 ஆயிரம் பேர் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில்லை. எனவே அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதுவரை அந்த நிறுவனங்களுக்கான நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.