அனுமதியின்றி பேனர் வைத்தால்.. அச்சகத்துக்கு சீல்: சென்னை மாநகராட்சியின் புதுவித எச்சரிக்கை

அச்சடிக்கும் பணியை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்களுக்கு, அச்சடிக்கும் பணியை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அச்சகம் மூடி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.326(BB)யின்படி ஆணையாளர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்களின் உரிய அனுமதி பெற்று விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் அனுமதி பெறுபவர்களின் விளம்பரப் பதாகைகளை அச்சிடும் போதும், அவ்விளம்பரப் பதாகைகளின் கீழ்ப்பகுதியில் அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகியவற்றை Tamil Nadu Urban Local Bodies (Permission for Erection of Digital Banners and Placards) Rules, 2011ல் விதி எண்.3(7) தெரிவித்துள்ளதற்கிணங்க, அனைத்து அச்சகங்களும் அச்சடிக்கும் போது தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என 21.02.2019 அன்று நடைபெற்ற டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் அவர்களால் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், உயர்நீதிமன்றத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் குறித்த நீதிமன்ற வழக்கு எண்.33819/2018 மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண். 61/2019 ஆகியவற்றில் பல கட்ட விசாரணைகளின் போது டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கத்திற்கு நீதிபதிகளால் அறிவுரைகளும் வழங்கப்பட்டு, பின்பற்றப்படாதது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.287ன்படி பெருநகர சென்னை மாநகராட்சி தொழில் உரிம விதிகளுக்கு மாறாக, உரிமம் பெறாமல் பதாகைகள் அமைக்கும் நபர்களுக்கு அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மூடி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com