சென்னைப் பல்கலைக்கழகம் வரும் 13, 14 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இதில் தொலைநிலைக் கல்வி நிறுவன பட்டப் படிப்பு மாணவர்களும் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகமும், ஜஸ்ட் டயல் நிறுவனமும் இணைந்து இந்த இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இதில் பல்கலைக்கழக துறைகளில் படிக்கும் மாணவர்களும், தொலைநிலைக் கல்வி நிறுவன மாணவர்களும், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். இறுதியாண்டு மாணவர்களும் பங்கேற்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகப் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யத் தவறியவர்கள், செப்டம்பர் 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்தும் பதிவு செய்து, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.