பரோலை மேலும் நீட்டிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு அவரது மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகள் செய்திட ஒருமாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அவர் ஜூலை 25-ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பரோலை மேலும் நீடிக்க கோரிய நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.