வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (செப்டம்பர் 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (செப்டம்பர் 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றனர்.
திருப்பத்தூரில் 60 மி.மீ. மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 60 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தலா 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஜி.பஜார், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.