தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர்கள் நூதனப் போராட்டம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர்-மாணவிகள் 3-ஆவது நாளாக புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர்கள் நூதனப் போராட்டம்


தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர்-மாணவிகள் 3-ஆவது நாளாக புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க தமிழக அரசின் மீன்வளப் பல்கலைக்கழகம் முடிவு செய்து, மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9-ஆம் தேதி முதல் தூத்துக்குடி, நாகப்பட்டினம், பொன்னேரி மீன்வளக் கல்லூரிகளில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடந்த 2 நாள்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக 11 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்-மாணவிகள் 3-ஆவது நாளாக புதன்கிழமை, கல்லூரி நுழைவுவாயில் முன் முகத்தில் வண்ணம் பூசி, மண்டியிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இக்கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தரைச் சந்தித்து, சுய நிதி மீன்வளக் கல்லூரி தொடங்க வேண்டாம், மாணவர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கல்லூரியை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். 
துணைவேந்தர் தெரிவிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com