காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்பர்அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை காவல்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பூக்கடை வடக்கு சரகத்தில் மட்டும், ஒரு உதவி ஆணையர், ஒரு காவல் ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இதுதவிர சென்னையின் பிற இடங்களில் 791 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டுமே காவல்துறையில் இத்தனை காலிப்பணியிடங்கள் இருந்தால், மற்ற மாவட்டங்களில் நிலைமை மேலும் மோசமாகத் தான் இருக்கும்.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கவே கடந்த 2013-ஆம் ஆண்டு காவல்துறை சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரி தமிழக உள்துறைச் செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால் அந்த மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.