மூன்று நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 13) தலைமைச் செயலகம் வருகிறார். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகம் வந்தார். மின்சாரப் பேருந்து, அம்மா காவல் ரோந்து வாகனம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் கடந்த 28-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து 14 நாள்கள் வெளிநாடு பயணம் சென்றார். பிரிட்டன், அமெரிக்கா, துபை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர் கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவு சென்னை திரும்பினார்.
அதன்பின்பு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார். வெள்ளிக்கிழமை காலை சென்னை தீவுத் திடலில் நடைபெறும் உணவுத் திருவிழா கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார். அதன்பின், நண்பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகம் வருகிறார். வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு 17 நாள்களுக்கு பிறகு அவர் தலைமைச் செயலகம் வரவுள்ளார். புதிய மாவட்டங்கள் பிரிப்பது உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.