இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைக்கு விரும்பி வரும் மாநிலங்களில் முதன்மையானதாக தமிழகம் விளங்குகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழகப் பிரிவு மருத்துவ பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு(சிஐஐ), தமிழக டிராவல் மார்ட் சங்கம் ஆகியன சார்பில், மருத்துவ மதிப்பு பயண மார்ட் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 19-ஆம்தேதி தொடங்கி செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழகப் பிரிவு தலைவர் எஸ்.சந்திரமோகன் கூறியது: நாட்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முதன்மையான சுற்றுலா அமைவிடமாக தமிழகம் விளங்குகிறது. 2016-ஆம் ஆண்டில், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து 34 கோடியே 40 லட்சம் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழகத்துக்கு கடந்த ஆண்டு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 47 லட்சம். இந்திய முழுவதுக்கும் இதுவே மிக உயர்ந்த எண்ணிக்கை என்றார் அவர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழகப் பிரிவு மருத்துவ பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்
எஸ்.சந்திரகுமார் கூறியது: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவச் சுற்றுலாவில் மிகவும் விரும்பப்படும் மாநிலங்களில் முதன்மையானதாக தமிழகம் விளங்குகிறது. சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மருத்துவ சிகிச்சைக்கு இந்தியாவை தேர்வு செய்யும் நோயாளிகளில் 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை தேர்வு செய்கின்றனர் என்றும் , இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா பயணிகளாக வருபவர்களில் சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் பேரை தமிழகம் ஈர்த்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சுற்றுலாவில் தமிழகத்தை தொடர்ந்து, மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார் அவர். நிகழ்ச்சியில், தமிழக டிராவல் மார்ட் சங்க நிறுவனத் தலைவர் ஏ.நடராஜன், தமிழக சுற்றுலாக் குழு ஒருங்கிணைப்பாளர் (சிஐஐ) லிஜி ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.