பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 விற்பனை விலையை அதிகரித்து அறிவித்த தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அதனை அமல்படுத்தியது.
பால் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் பொருள்களின் விலையும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.30, பால் பௌடர் ஒரு கிலோ ரூ.50, பன்னீர் ஒரு கிலோ ரூ.50, வெண்ணெய் ஒரு கிலோ ரூ.20, பால்கோவா ஒரு கிலோ ரூ.20, தயிர் அரை லிட்டர் ரூ.2 உயர்த்தி தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த புதிய விலை உயர்வானது புதன்கிழமை (செப். 18) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆவின் பாலகங்களில் விற்கப்படும் 120 மில்லி லிட்டர் கொண்ட சூடுபடுத்தப்பட்ட பால் விலை ரூ.7-லிருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.