சென்னை: வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு தில்லியில் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு வடக்கு தில்லியில் இருந்து ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் பெயரில் கடந்த 9-ஆம் தேதி மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் அவர் தான் பஞ்சாப் பிரிவினையை ஆதரிக்கும் 'தில்லி காலிஸ்தான் ஆதரவு குழு'வைச் சேர்ந்தவர என்றும், செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த குண்டுவெடிப்பை தனது மகனுடன் சேர்த்து நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் ஓரிடத்தில் இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் பயணத்தில் இருப்பதாகவும், செல்போன் எண்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால், தன்னை தேட முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை காவல்துறைக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த பதிவாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.