தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது: போட்டுத் தாக்கிய ஸ்டாலின்  

தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது என்று அதிமுக அரசுக்கு சிடிஎஸ் மென்பொருளும் நிறுவனம் லஞ்சம் தந்த வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது என்று அதிமுக அரசுக்கு சிடிஎஸ் மென்பொருளும் நிறுவனம் லஞ்சம் தந்த வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ் நிறுவனத்திடம் அ.தி.மு.க அரசு கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய்  லஞ்சம் பெற்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில், சிடிஎஸ் நிறுவனம் லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியிருக்கிறது.   

இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திங்களன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு:

அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான #CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை!

மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com