தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செப்.14, 15 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு வாகனச் சோதனையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கிய 1 லட்சத்து 18,018 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையிலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்கள் , மாநகராட்சிகள் என பிரிக்கப்பட்டு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செப்.14, 15 ஆகிய இரண்டு நாள்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகனச் சோதனை நடைபெற்றது.
இதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கியதாக வடக்கு மண்டலத்தில் 25 ஆயிரத்து 278, மேற்கு மண்டலத்தில் 22 ஆயிரத்து 931, மத்திய மண்டலத்தில் 21 ஆயிரத்து 862, தெற்கு மண்டலத்தில் 24 ஆயிரத்து 396 மற்றும் மாநகராட்சிகளில் 24 ஆயிரத்து 128 என மொத்தம் 1 லட்சத்து 18, 018 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதில் வடக்கு மண்டலத்தில் 6,921, மேற்கு மண்டலத்தில் 7,160 , மத்திய மண்டலத்தில் 7,255, தெற்கு மண்டலத்தில் 9,472 மற்றும் மாநகராட்சிகளில் 6,488 என மொத்தம் 36 ஆயிரத்து 835 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பயன்படுத்தி வாகனம் ஓட்டியதாக 28 பேர் மீதும், குட்கா சட்டத்தில் 542 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.