வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்....: சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் 80 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 70 மி.மீ., திருச்சி மாவட்டம் லால்குடியில் 60 மி.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் தலா 50 மி.மீ. மழை
பதிவானது.