திருப்பூரில் தவறுதலாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.40 லட்சத்தை திருப்பிச் செலுத்தாமல் செலவு செய்த தம்பதிக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள பொதுத் துறை வங்கியிலிருந்து வேறு ஒருவரது கணக்கிற்கு ரூ. 40 லட்சம் பணப்பரிமாற்றம் செய்தபோது ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) என்பவரது வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக சென்று விட்டது. இதனை மிகத் தாமதமாக அறிந்த வங்கி நிர்வாகம் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு குணசேகரனிடம் கேட்டுள்ளது. ஆனால் அவர் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்தாமல் செலவு செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
ரூ.40 லட்சத்தை எடுத்து சொத்துக்கள் வாங்கியது, மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்தது என்று அவர்கள் லட்சாதிபதிகளாக வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து வங்கி உதவி மேலாளர் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குணசேகரன், அவரது மனைவி ராதா (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது திருப்பூர் 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பிச் செலுத்தாத குணசேகரன், ராதா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ரூ.40 லட்சம், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப் பணித் துறை ஒதுக்கியதாகும். பொதுப் பணித் துறை செயல்பொறியாளரின் வங்கி எண்ணுக்குப் பதிலாக குணசேகரனின் வங்கி எண்ணுக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டதே மேற்கண்ட சம்பவங்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.