தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு அக்.23ம் தேதி முதல் முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு அக்.23ம் தேதி முதல் முன்பதிவு: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். 

எனவே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

அந்தவகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது,  மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள்,  தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கடந்த ஆண்டைப் போல தாம்பரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். 

வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. 

மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அங்கு பேருந்து நிலையம் இயக்கப்படுமா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

தீபாவளி பேருந்துகளுக்காக ஆகஸ்ட் 23ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும். 

அதேப்போல, தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மட்டுமல்லாமல், பெங்களுருவில் பணியாற்றும் தமிழர்களும் சொந்த  ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதற்குண்டான முடிவுகள் எட்டப்படும்.

சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தீபாவளி பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தில் நகர்ப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com