சென்னையில் சமூக ஊடகங்களில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு நபர் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இது குறித்து அதிமுக நிர்வாகி ஜெயபிரகாஷ், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவதூறு பரப்பியவர் தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்த எட்வின் கிறிஸ்டோபர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், எட்வின் கிறிஸ்டோபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.