காவல் ஆய்வாளர் தாக்கி கால் முறிவு ஏற்பட்ட கைதிக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைபேர் கிராமத்தைச் சேர்ந்த ரோஸ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், கடந்த 5-ஆம் தேதி அதிகாலை எனது மகனை வீட்டில் இருந்து பிடித்துச் சென்று அவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், எனது மகனின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். எனது மகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதிட்டார். அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரதாப் ஆஜராகி, மனுதாரரின் மகன் மீது 6 கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு என மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. இவருக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க முடியாது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் கைதிகளுக்கு சிகிச்சை வழங்க பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய அறைகள் உள்ளன. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் எலும்புமுறிவு தொடர்பான சிகிச்சைகள் நன்றாக வழங்கப்படுகின்றன. எனவே மனுதாரரின் மகனுக்கு உரிய சிகிச்சையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.