கீழடி அகழாய்வை மத்திய அரசு விரிவுபடுத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், கீழடியின் வயது கி.மு. 600 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக வரலாற்றின் புதிய கால எல்லையை உருவாக்குகிறது.
கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கங்கை சமவெளியில் எந்தளவுக்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததோ, அதேபோல தமிழகத்தின் தென்பகுதியில் வைகை நதிக்கரையில் பெரும் நகர நாகரீகம் இருந்ததை இன்றைக்கு அறிவியல் மெய்ப்பிக்கிறது. இந்த நிலையில், கீழடி ஆய்வை விரிவுபடுத்துவதும், தொடர்வதும் அவசியமாகும்.
உடனடியாக சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கவும், கீழடியில் அகழாய்வை விரிவுபடுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.