தமிழக-கேரள முதல்வர்கள் செப்.25-இல் சந்திப்பு: நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை: சுமுக உடன்பாட்டுக்கு வாய்ப்பு

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம், சிறுவாணி அணை ஆகிய திட்டங்கள் தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாள சின்னமாகும்.
தமிழக-கேரள முதல்வர்கள் செப்.25-இல் சந்திப்பு: நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை: சுமுக உடன்பாட்டுக்கு வாய்ப்பு

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம், சிறுவாணி அணை ஆகிய திட்டங்கள் தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாள சின்னமாகும். ஆனால், இந்தத் திட்டங்களின் நீர்ப் பங்கீடு கூட்டுறவில் நீண்ட காலமாக விரிசல் இருந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் இருமாநிலங்களின் கூட்டுறவைப் புதுப்பிக்கும் முயற்சியாக இருமாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டம் எனும் பிஏபி திட்டம் மூலம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் இத்திட்டம் இருந்து வருகிறது. இதுதவிர கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகாவின் பாசன வசதிக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்தத் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. பிஏபி திட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழக பகுதிகளில் பெய்யும் மழை நீரானது மேற்கு நோக்கி கேரளத்துக்குள் சென்று அரபிக் கடலில் கலந்து வீணாகி வந்தது.

இதனால், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இந்தத் தண்ணீர் கிடைக்காமல் வீணாகி வந்தது. பிஏபி திட்டம் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 20 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர இரு மாநிலங்களின் குடிநீர்த் திட்டங்களுக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் பிஏபி திட்டம் உதவியாக உள்ளது.

கூட்டுறவின் அடையாளம்...: 

இந்தத் திட்டம் கேரளத்தின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டது ஆகும். இரு மாநிலங்களுக்குப் பயன்படாத நீரை இரு மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாளமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இந்தத் திட்டம் 1962-ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. பிஏபி திட்டம் வடிவமைத்தபோது, திட்டத்தின் மூலம் 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டு, அவ்வாறு கிடைக்கும் தண்ணீரில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சியும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சியும் என பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

பிஏபி திட்டத்தை வடிவமைத்து நிதி ஒதுக்கி கட்டுமானம் செய்து முடித்து பராமரிப்பு செய்வது என அனைத்தும் தமிழகம் முழுமையாகச் செய்தது. மேலும், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் கட்ட இடத்தை குத்தகைக்குத் தந்து கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கியது.

இந்தத் திட்டத்தில் கேரளத்தின் பங்கு என்பது இடத்தை குத்தகைக்குத் தருவது, தமிழகத்துக்கு கேரளம் வழியாகத் தண்ணீர் கொண்டுச் செல்ல அனுமதிப்பது என்பது ஆகும். இதற்குப் பிரதிபலனாக தமிழகம் சார்பில் ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீர் கேரளத்துக்கு வழங்க வேண்டும். 

இரு மாநிலங்களுக்கும் பிரச்னை...: இப்படி இரண்டு மாநிலங்களுக்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்ற நீரை இரண்டு மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 50.5 டிஎம்சி தண்ணீர் கிடைக்காததால் நாளடைவில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. 

திட்டம் நிறைவேற்றப்பட்டு 57 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கேரளத்துக்குத் தற்போது வரை ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய 19.55 டிஎம்சி தண்ணீர் ஒரு சில ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால், பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை.

இதற்குக் காரணம் பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு என்ற திட்டத்தை தமிழகம் நிறைவேற்றி அதிலிருந்து 2.5 டிஎம்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமை உள்ளது. 

ஆனால், இந்தத் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த கேரளம் ஒரு நிபந்தனை விதித்துள்ளது. அதில் கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டிய பிறகு ஆனைமலையாறு திட்டத்தையும், கீழ்நீராறில் இருந்து கேரளத்துக்கு வழங்கும் 1.75 டிஎம்சி தண்ணீரையும் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இதில் இடைமலையாறு அணையைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கேரள அரசு கட்டி முடித்துவிட்ட நிலையில் தற்போது வரை அணையை முழுமையாக கட்டி முடிக்கவில்லை என்று கூறி வருகிறது.

எனவே, ஆனைமலையாறு அணையைக் கட்டக்கூடாது என கேரளம் தெரிவித்து வருகிறது. இதனால், தற்போது வரை தமிழகத்துக்கு நேரடியாக 4.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதுதவிர பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணை நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழைப்பொழிவை விட குறைவான மழைப் பொழிவே கிடைக்கிறது. இதன் மூலமும் சுமார் 2 டிஎம்சி வரை தமிழகத்துக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பிஏபி பாசன பகுதிகள் வறட்சியிலேயே இருந்து வருகின்றன. 
கூட்டுறவில் விழுந்த விரிசல்...: 
பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்றவிடாமலும், கீழ்நீராற்றில் கூடுதலாக 1.75 டிஎம்சி தண்ணீர் எடுக்கவிடாமலும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளில் பணியாற்றும் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே கூட்டுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

பிஏபி திட்டம் தொடங்கும் இடமான நீராறில் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரில் சுரங்கப்பாதை மூலம் அதிகபட்சமாக 3,000 கன அடி வரை மட்டுமே தமிழகம் பயன்படுத்த முடியும். இதனால், மழைக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள நல்லாறு என்ற அணைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு கேரளம் முட்டுக்கட்டையாக உள்ளது.

சிறுவாணி பிரச்னை...: தமிழகத்தில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. இந்தத் திட்டமும் இரு மாநிலங்களின் கூட்டுறவால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தத் திட்டத்திலும் அவ்வப்போது கேரள அதிகாரிகள் இடையூறு செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

அமராவதி அணையின் நீராதாரமான ஆற்றில் தடுப்பணை, சிறுவாணி நீராதாரத்தில் தடுப்பணை கட்டுவது என கேரளம் செயல்பட்டு வருவதால் நீர்ப் பங்கீட்டு கூட்டுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

தமிழக-கேரள மக்கள் சகோதரர்களாக இருந்துவரும் நிலையில் கேரளத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர், அதிகாரிகளால் சிலரால் மட்டும் நீர்ப் பங்கீட்டு பிரச்னை ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

பிஏபி திட்டம் துவங்கப்பட்டபோது, இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த கூட்டுறவு நாளடைவில் விரிசல் அடைந்து வந்த நிலையில் இருமாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. 

நிரந்தரத் தீர்வுக்கான முயற்சி...

இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனும், கேரள நீர்ப் பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியும் இரு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, வரும் 25-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுகின்றனர். தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கேரளம் சார்பில் முதல்வர் பினராயி விஜயன், நீர்ப் பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

இருமாநில அரசுகளும் விரும்பி சந்திப்பு நடைபெறுவதால் நதி நீர்ப் பங்கீடு, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம், சிறுவாணி பிரச்னை, நம்பியாறு-பொன்னம்பலா திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு சுமுக உடன்பாடு எட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இதுகுறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறுகையில், திட்டம் தொடங்கும்போது, கூட்டுறவு மனப்பான்மையுடன் கேரளம் நடந்துகொண்டது. அதேபோல், தற்போதும் நடைபெறும் சந்திப்பில் கேரள அரசு கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்படும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com