இந்திய ராணுவம் சமீபத்தில் துல்லியத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பாலாகோட்டில் மீண்டும் பயங்கரவாத குழுக்கள் முகாம்களை அமைத்து செயல்படத் தொடங்கியுள்ளன என இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை ராணுவ அதிகாரிகளாக உருவாக்குவதற்கான திறன் மேம்பாட்டு சிறப்புப் பயிற்சி பிரிவை தலைமைத் தளபதி விபின் ராவத் திங்கள்கிழமை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராவத் கூறியது: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது. எனவே தொழில்நுட்பம், உளவுத் துறை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் எல்லைப் பகுதிகளை இந்திய ராணுவம் பாதுகாத்து வருகிறது. தீவிரவாதத்துக்கும், மதத்திற்கும் தொடர்பில்லை. பாகிஸ்தான் பாலாகோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் பயங்கரவாத முகாம்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காஷ்மீர் வழியாக இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவத் தயாராகி வருகின்றனர். ஆனால் இவர்களைத் தடுப்பதற்கான பணிகளில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றார் விபின் ராவத்.