மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938-ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், சோனியா, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா குறுக்கி விசாரணை நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சி அனைவரையும் ஏமாற்றுபவர்கள் எனவும், அதனால் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இருதரப்பும் எழுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் செப். 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சனிக்கிழமை உத்தரவிட்டார்.