கீழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறிந்தவற்றைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் அதாவது, 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்ந்ததைக் காண முடிந்தது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு பொருள்களையும் கண்டபோது மகிழ்ச்சி, பெருமிதம் உயர்ந்து கூடிக்கொண்டே இருந்தது.
சிந்துசமவெளி நாகரிகம் பற்றி ஹரப்பா-மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகள் வாயிலாக, இந்தியா முழுவதும் தொன்மையான திராவிட நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் முன்பே பரவியிருந்ததை ஆய்வாளர்கள் ஏற்கெனவே உறுதி செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் குறித்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் வெளிப்பட்டன.
எனினும், தமிழரின் பெருமைகளை வெளிப்படையாகக் கூறுவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வுத் துறை தயக்கம் காட்டி வருவதும் போராடிப் போராடி அதனை வெளிக்கொண்டு வருவதும் தொடர்ந்து நமது கடமையாக உள்ளது.
திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் வளர்ந்த கீழடி நாகரிகத்தையும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியம். கீழடிக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் சனோவ்லி என்ற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் போல, கீழடியும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும்.
கீழடியுடன் ஆய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட் என்ற இடத்தில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கீழடியிலும் அதே போன்ற உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன், வைகை ஆற்று நாகரிகத்தின் தொடர்ச்சியான ஆய்வுகளுக்காக மதுரையில் ஓர் அலுவலகமும் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.