ஏழு தமிழர்கள் விடுதலை: பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? ராமதாஸ் கேள்வி 

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550 ஆவது பிறந்த நாளையொட்டி, 550 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில் பயங்கரவாதி பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படிருப்பதுடன், 25 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 8 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி, 550 பேர் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். தமிழகத்திலும் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பிறந்தநாள்களையொட்டி  இவ்வாறு ஏராளமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 9 பயங்கரவாதிகள் தொடர்பான முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள பல்வந்த் சிங் ரஜோனா பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாவார்.

வழக்கு விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட போதும் கூட, அதை குறைக்க வேண்டும் என்று கருணை மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை.

2012-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அவர்களின் விடுதலைக்காக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். அடுத்த 14 நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர் விடுதலை பற்றி 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்த போது, அதுகுறித்து தமிழக அரசிடம் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று விடுதலைக்கு தடை வாங்குகிறது.

பஞ்சாப் மாநில அரசு அளித்த பரிந்துரை மீது 14 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கிறது; தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா?

பஞ்சாபில் காங்கிரஸ் முதலமைச்சரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்ய  காங்கிரஸ் அரசே பரிந்துரைக்கிறது; மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால், பேரறிவாளன் குற்றமற்றவர் என புலனாய்வு அதிகாரியும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதியும் கூறிய பிறகும், 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அவரும், மற்றவர்களும்  விடுவிக்கப்படவில்லை என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை ஏற்க முடியவில்லை.

ஏற்கனவே கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் நடிகர் சஞ்சய்தத்துக்கு காட்டப்பட்ட சலுகை 7 தமிழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இப்போது  பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி; தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்வதற்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com