இன்று காலை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென ஒரு சின்ன சாரல் மழை பெய்து சாலைகளில் சென்று கொண்டிருந்த ஒன்றும் தெரியாத அப்பாவிகளை நனைத்தது.
சரி மழைதான் பிடித்துவிட்டது என்று மறைவிடங்களைத் தேடி ஓடி ஒளிந்தவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு, எட்டிப் பிடிப்பதற்குள் காணாமல் போகும் நீர்க்குமிழ் போல மறைந்துவிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இது பற்றி ஒரு பதிவை தனது பேஸ்புக்கில் இட்டுள்ளார்.
அதில், இன்று காலை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் திடீரென ஒரு மழை பெய்தது. ஒரு வேளை மீண்டும் அதுபோன்றதொரு மழையை நீங்கள் இன்று சந்தித்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
கடற்கரைப் பகுதியில் இருந்து கருத்த மேகங்கள் தரைப் பகுதியை நோக்கி வருவதெல்லாம் பருவ மழையின் விருந்துதான். கிட்டத்தட்ட இது வடகிழக்குப் பருவ மழையின் ஒரு சேம்பிள்தான். அதாவது கிழக்குப் பகுதியில் இருந்து மேகக் கூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனாலும், வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பானதொரு மழை பதிவாகியுள்ளது.
இந்த மழை விருந்தில் நீலகிரியும், டெல்டா பகுதிகளும் கூட பங்கேற்றுக் கொண்டன.
அதே சமயம், தென்மேற்குப் பருவ மழை இன்னும் நிறைவடையவில்லை. வழக்கமாக இது செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிறைவடைவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்த சிறப்பானதொரு தென்மேற்குப் பருவ மழை இதுவாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.