பவானியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் தினசரி காய்கறிச் சந்தை மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி சுரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
பவானி நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சமூகப் பரவல் ஏற்படும் வகையில் கடந்த ஒரு வாரகாலமாக தற்காலிகமாக தினசரி காய்கறிச் சந்தை இயங்கி வருகிறது. இங்கு, வருவோர் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பவானி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு, தானியங்கி கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். நகராட்சிப் பொறியாளர் கதிர்வேல், சுகாதார அலுவலர் சோழராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோன்று, பவானி அரசு மருத்துவமனையில் அஞ்சாதே நற்பணி மன்றம் சார்பில் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பு சுரங்கம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன், கொமதேக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் துரைராஜா, பவானி நகரச் செயலாளர் ஸ்ரீகுமார், ஊராட்சிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.