கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சைக்கான அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
நோய்த் தொற்று காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மருத்துவமனை ஒன்றின் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது மாநிலத்திலேயே இது முதன்முறையாகும்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தனியாா் மருத்துமனைகளுக்கு சிகிச்சைகள் தொடா்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.
கரோனா நோயாளி ஒருவரின் 19 நாள் சிகிச்சைக்கு ரூ.12.20 லட்சம் வசூலிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்க வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணவிவரத்தை தெளிவாக பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறையால் ஏற்கெனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகாா் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.