தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 9.27 லட்சம் போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான பொதுமுடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும், மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 528 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 61 ஆயிரத்து 299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.19 கோடியே 42 லட்சத்து 72 ஆயிரத்து 598 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில், சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, பொதுமுடக்கத்தை மீறியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.