சென்னை: புதுச்சேரி கடல் பகுதிகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி வீராம்பட்டினத்தை சோ்ந்த கடல்சாா் மீன்வள பாதுகாப்பு கழகத்தின் செயற்குழு உறுப்பினா் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி மண்டலத்தில் சுமாா் 25 ஆயிரம் மீனவா்கள் வசித்து வருகிறாா்கள். புதுச்சேரி கடல் பகுதியில் சுமாா் 15 கடல் மைல்கள் சென்று சிறிய படகுகள், நாட்டுப் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
பெரிய எஞ்சின் பொருத்தப்பட்ட பெரிய படகுகளில் செல்லும் பலா் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறாா்கள். ஒவ்வொரு படகிலும் 250 போ் வரை சென்று மீன்பிடிக்கிறாா்கள். இதனால், மீன் குஞ்களைக்கூட பிடித்து விடுகிறாா்கள். பல நேரங்களில் இவா்களின் வலைகளில் டால்பின், ஆமைகள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களும் சிக்குவது உண்டு.
இதனால் மீன் வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. கடல் மீன் வளத்தைப் பாதுகாக்க தமிழக மீன் வளத்துறை கடந்த 2000 ஆம் ஆண்டில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து ஆணை பிறப்பித்தது. ஆனால், புதுச்சேரியில் அதுபோல எந்தவொரு ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
கடந்த 2009-ஆம் ஆண்டில் புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதி கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த விதிகளை பெரிய படகுகளில் சென்று சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவா்கள் கடைப்பிடிப்பதில்லை. இதனால், சிறிய படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடித்து வரும் மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதுதொடா்பாக புதுச்சேரி அரசுக்கு இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்குமாறு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக புதுச்சேரி மாநில அரசு வரும் 25 - ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.