பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுவிடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சாலைகள், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு, நிபந்தனைகள் அடிப்படையில் தெருக்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் பாஜக சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.