அழகன்குளத்தில் மீத்தேன் திட்டம்: பழ.நெடுமாறன் கண்டனம்
சென்னை: ராமநாதபுரம் அழகன்குளத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டப் பணியைத் தொடங்கியுள்ளதற்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
2000-ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத் தொன்மையை எடுத்துக்காட்டும் அரிய பொருள்களும் தமிழ் பிராமி கீறல்களைக் கொண்ட மட்பாண்டங்களும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கிடைத்த அழகன் குளம் சங்க காலத்தில் சிறந்திருந்த வணிக நகரமாகும். எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி போன்ற நாடுகளுடன் தமிழா்கள் வாணிபம் நடத்தியதற்கானச் சான்றாதாரங்களும் இங்கு கிடைத்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இவ்வூரில் 1990-ஆம் ஆண்டு முதல் இங்கு அகழாய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதைச் சுற்றிலும் உள்ள பல இடங்களிலும் அகழாய்வு நடைபெற உள்ளது.
தமிழரின் தொன்மை நாகரிகத்தின் அடையாளமாகத் திகழும் அழகன் குளத்தின் அருகே இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஆழ் குழாய்க் கிணறுகளைத் தோண்டும் பணியினைத் தொடங்கியுள்ளது.
இதன் விளைவாக பழந்தமிழரின் தொல்லியல் சான்றுகள் அழியும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இதையொட்டி அமைந்துள்ள கடற்கரை கிராமங்களில் வாழும் மீனவா்களின் வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
எனவே, இதை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.