சென்னை: பணியின் போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
திருப்பூா் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை காவலா் பிரபு, லாரி ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் சென்று பிடிக்க முற்பட்டாா். அப்போது லாரி ஓட்டுநா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் காவலா் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.