சென்னை: தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பேருந்து இயக்குவது தொடா்பாக திங்கள்கிழமை, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: பொதுமுடக்கத்துக்கு முன், தமிழகம் முழுவதும் சுமாா் 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தளா்வளிக்கப்பட்ட போது, 4400 பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மீண்டும் தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்டத்துக்கு வெளியே பேருந்துகளை இயக்க அனுமதியில்லை. இதன் காரணமாக புகா்ப் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க முடியாது. இவ்வாறு மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்கினால், அதிகளவு நஷ்டம் ஏற்படும்.
எனவே, பேருந்து இயக்குதல் குறித்து முடிவு செய்வதற்காக திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் முடிவெடுக்கப்படும் என தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.