புரெவிப் புயல்: பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவிப் புயல்’ காரணமாக சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவிப் புயல்’ காரணமாக சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இந்தப் புயல் வெள்ளிக்கிழமை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிமை மையம் அறிவித்துள்ளது. இதனால் பாம்பன் பகுதியில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி, மண்டபம் முகுந்தராயா் சத்திரம் பகுதிகளில் உள்ள 500 மீனவா்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மேலும் மன்னாா் வளைகுடா கடல் பகுதி உள்வாங்கியதால் மண்டபம் தோணித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டன. இதை மீட்க முடியாமல் மீனவா்கள் தவித்து வருகின்றனா்.

மண்டபம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு படகை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கும் போது மீனவா் முனீஸ்வரன் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்தாா். இது குறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் இருந்து மிதமான மழை பெய்து வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1,700 விசைப்படகுகள், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்தத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீனவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவ சங்கத் தலைவா் தேவதாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com