திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஓராசிரியர் பள்ளி சார்பில் தனியார் நிதி நிறுவன பங்களிப்புடன் ரூ.47 லட்சத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 94 பேருக்கு நவீன குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் ஓராசிரியர் பள்ளிகள் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதேபோல், கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஓராசிரியர் பள்ளிகள் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு சமுதாய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஓராசிரியர் பள்ளி சார்பில் தனியார் நிதி நிறுவன பங்களிப்பு மூலம் ரூ.47 லட்சத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நவீன குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் கடம்பத்தூர், பூண்டி ஊராட்சி ஒன்றியங்களில் விடையூர், புளியங்கொண்டாபுரம், வீரராகபுரம், கல்கால் ஓடை, கலவை மற்றும் வேலாகபுரம் ஆகிய கிரமங்களில் குளியலறையுடன் கூடிய 94 சுகாதார வளாகம் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்து பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே இந்த சுகாதார வளாகங்களை பயனாளிகளுக்கு பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது.
இதில், திருவள்ளூர் அருகே உள்ள விடையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 குளியலறையுடன் கூடிய சுகாதார வளாகங்களை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓராசிரியர் பள்ளிகளின் கெüரவ செயளாலர் கிருஷ்ணமாச்சாரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் நிதி நிறுவன குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அகிலா சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குளியலறையுடன் கூடிய சுகாதார வளாங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து குளியலறையில் பயன்படுத்தப்படும் முக கண்ணாடி, கிருமி நாசினி, டிரம், பக்கெட், பிரெஷ், சோப்பு ஆகிய பொருள்களையும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கள ஆய்வு ஒருங்கினைப்பாளர்களான சிவராமகிருஷ்ணன், செந்தில் மற்றும் ஓராசிரியர் பள்ளியின் தூய்மை பாரத திட்டத்தின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.